Monday, May 31, 2010

நழுவிய தருணங்கள்

நடந்தால் மனம் சமன்படும். சமன்பட்ட மனநிலையில் தெளிவான முடிவு எடுக்கலாம். இது அப்பாவிடமிருந்து எனக்கு வந்த பழக்கம், எந்தவொரு விசயத்தையும் தனியே அலசி ஆராய வேண்டும் என்றால் " சிவகாமி, கொஞ்சம் நடந்துட்டு வரேன்" என்ற தகவலுடன், செருப்பை மட்டும் போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பிப்பார். எப்பொழுது வந்து தூங்குவார் என்று யாருக்கும் தெரியாது. அவர் வரும்பொழுது வாசலில் உள்ள கயிற்று கட்டில் அவரை இதமாக வாங்கிக்கொள்ளும். அம்மா, அவள் முகத்தை பார்த்தால் எப்பவும் ஒரு சிரிப்பு மிதந்து கொண்டிருக்கும். அப்பாவின் உணர்வுகளின் கண்ணாடி, அப்பா சிரிச்ச சிரிப்பா அழுதால் அழுவாள். நான் நல்லா இருக்கணும் அவ்வளவுதான், மிக குறிகிய வட்டம்.


உண்மையில் நடந்தால் மனம் சமன்படுகிறதா இல்லை அப்பாவிடமிருந்து மனம் உள்வாங்கியதால் எனக்கும் இது கைவசபடுகிறதா என்று தெரியவில்லை. ஏனோ இன்று மனம் சமன்படவில்லை. நூல் அறுந்த பட்டம்போல் இலக்கின்றி மனம் அலைவதை உணர்கிறேன். எனக்கு பின்னால், ஒரு வாகனத்தின் ஒலி கேட்க அனிச்சை செய்யலாக சாலை ஓராமாக ஒதுங்கினேன். அவ்விடத்தில் உள்ள வீட்டின் சுற்றுச்சுவரில் விளம்பரம் செய்யாதீர் என்று விளம்பரம் செய்யபட்டிருந்தது. மறுபடியும் எண்ணங்களை அப்பா ஆட்கொள்கிறார்.

அப்பாவின் கைப்பிடித்து நடந்த காலத்திலும் சரி, வளர்ந்து கல்லூரி சென்ற காலத்திலும் சரி, அவரை கவனித்து மனம் உள்வாங்கிய பண்புகள் நிறைய இருந்தாலும், வாய் மொழியாக பகிர்ந்து கொண்டது சொற்பம் மிகச்சொற்பம்.

என் தேவைகள் எல்லாவற்றையும் நான் உணரும் முன்னே உணர்ந்து செய்திருக்கிறார் என்பது இப்பொழுது புரிகிறது. அவரிடம் நான் பாசாமா பேசினதில்லை, பாசத்தை வெளிப்படுத்தியதில்லை. ஆனால், கல்லூரியில் எனது நெருங்கிய நண்பர்கள் என்னை "சரியான அப்பா கோண்டுடா " என்று கிண்டல் செய்யும் அளவிற்கு என் பேச்சில் அப்பாவின் பங்கு இருக்கும்.

கல்லூரி படிப்பை தொடர்ந்து, வேலை கல்யாணம் குழந்தைகள்னு வாழ்க்கை அழகாகதான் ஓடிகொண்டிருந்தது. அன்று மதிய உணவு உண்டுவிட்டு, வெற்றில்லை போடும்போது, நெஞ்சு வலிக்குதுபா….. என்று சொல்ல, வீடு அமலிபட்டது. என் பொண்ணு, ஓடிபோய் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தால், அதை குடித்து விட்டு என்னைத்தான் பார்த்தார், அடுத்த கணம் உயிர் பிரிந்தது.

வீடு ஸ்தம்பித்து, இயல்பு நிலைக்கு வர பல மாதங்கள் ஆனது. சென்ற வாரம் தான் முதல் திதி, எனக்கு தெரியாத மொழியில் ஐயர் ஏதோ சொல்ல நானும் அதை வாங்கி மறுபடியும் சொன்னேன். அவருக்கு புரியுதோ என்னவோ என்று மனசுக்குள் சாந்தி சாந்தி என்று கூறினேன். எந்த குறையும் இன்றி நல்லபடியாக வாழ்ந்து போயிருக்கார் என்று இன்று காலை வரை நான் நம்பினேன்.


அப்பாவின் நண்பர், இன்று பிற்பகல், என்னை பார்த்தார், நலம் விசாரித்தார். பேச்சு முழுதும் அப்பாவை சுற்றித்தான். "உங்கப்பன், நீ அவன்கிட நிறைய பேசமாட்டேன்னு அடிகடி சொல்லுவண்டா" என்றார். அடுத்த வாரம் வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லியவாறு அவர் வேலையே பார்க்க போய்விட்டார்.

முதல் முறையாக நான் இதைப்பற்றி யோசித்தேன், ஒரு வெற்றிடம் தெரிந்தது. நிறைய பேசியிருக்கலாம். நிறைய பகிர்ந்துருக்கலாம்.
ஆச்சு, மூன்று கிலோமீட்டர் நடந்தாச்சு. எது எப்படி இருந்தால், நடந்தால், போனால் எனகென்ன என் வேலையை சரியாக செய்வேன் என்று நேரம் ஓடிக்கொண்டிருந்தது.வீட்டைநோக்கி நடந்தேன். அம்மா, தாழ்வாரத்தில் காலை நீட்டியவாறு அமர்ந்திருந்தாள். அவள் அருகில் அமர்ந்தேன். அவள் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். ஏதாவது பேசுமா" என்றேன். இந்த தருணத்தை நழுவ விடக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது.

Tuesday, September 16, 2008

திருப்தி- சிறுகதை

காவிரி தாயின் பாசத்தில் செழுமையுடன் விளங்கும் தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட ஒரு சிறிய கிராமத்தின் மையத்தில், அந்த பள்ளிக்கூடம் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது.


"எனக்கு உடம்பு சரியில்லை அதனால் வீட்டுப்பாடம் செய்யவில்லை" என்று மிக வருத்தத்துடன் ஒரு மிளகு (கிராம பகுதியில் சிறு குழந்தையை இப்படி அன்பாக அழைக்கும் வழக்கம் இருக்கிறது) இன்னொரு மிளகிடம் சொல்ல "நான் பண்ணிட்டேன்னே !!!" என்று ஒரு சாம்ரஜியமே தன் வசமான சந்தோஷத்தில் சொல்லியது. திடீரென்று "டீச்சர் வந்துட்டாங்க .. டீச்சர் வந்துட்டாங்க" என்று சலசலப்புடன் ஒரு அமைதி நிலவ தொடங்கிய நேரத்தில் மதுரம் உள்ளே நுழைந்தாள். இளங்கலை பட்டதாரியான மது பார்ப்பதற்கு சிமிழ் போன்று இருப்பாள். அவள் கிராமத்தின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிக ஆசிரிய பணி கிடைக்க, அதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தொடர்ந்தாள்.



மது தன் இருக்கையை நெருங்கி, பாடப்புத்தகத்தை பிரித்துகொண்டே எல்லோரையும் பார்த்து, நேற்று எந்த பக்கத்தில் நிறுத்தினேன் என்று பொதுவாக ஒரு கேள்வி கேட்க "72 ஆம் பக்கத்தில் கடைசி பத்தி என்று சில குரல், இல்ல டீச்சர் 73 ஆம் பக்கத்தில் முதல் பத்தி என்று சில குரல், இதற்கிடையில் "பாத்தியா டீச்சர் வீட்டுப்பாடத்தை மறந்துட்டாங்க", என்று பக்கத்தில் உள்ள மிளகை பாக்க அதுவோ பிடித்த சாம்ராஜ்யமே திடீரென்று அழிந்தார்போல் முகத்தை தொங்க போட்டுக்கொண்டது.

மது "ஹ்ம்ம் ஹ்ம்ம் சரி சரி, நாம் யாரை கிராமத்தின் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும்?" என்று கேட்க எல்லா நண்டும் சுண்டும் விளித்தது. நேற்றுத்தானே நடத்தினேன் யாருக்கும் ஞாபகம் இல்லையா ? என்று மறுபடியும் கேட்க எல்லோரும் விழித்தனர். அனைவரையும் ஒரு முறை ஆழ்ந்து பார்த்துவிட்டு,
"யார் ஒருவர் தன்னலமின்றி கிராம மக்களுக்கு தொண்டு புரிவாரோ அவரைத்தான் நாம் கிராமத்தின் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும்" என்று நிறுத்தினாள். "ஹ்ம்ம் இப்ப சொல்லுங்க யாரை தேர்ந்தெடுப்பிர்கள் ?" என்றதும், ஒரு மிளகு "தன்னலமின்றி ...... என்று ஒரு நண்டு ஆரம்பிக்க இன்னொரு மிளகு தொண்டு.... என்று இழுக்க... மற்றொரு மிளகு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடித்தது. மற்றவார்த்தை எல்லாம் அக்காகுருவிய பார்க்க போச்சா? என்றதும், எல்லா குழந்தைகளும் சிரித்தது. தானும் சேர்ந்து சிரித்தாள்...


பள்ளியில் கடைசி வகுப்பு மணி அடிக்கவும், எல்லா சிட்டுகளும் தன் வீட்டைநோக்கி பறக்க ஆரம்பித்தன. மதுரமும் தன் வீட்டைநோக்கி உற்சாகமாக வேக நடைப்போட்டாள். கால் தன் போக்கில் போக, மனம் என்னவோ அண்ணன் வாசுவின் வருகையை பற்றி எண்ணியது. உனக்கு ஒரு விஷயம் இருக்குன்னு சொன்னானே என்னவா இருக்கும் என்று யோசித்து ஒன்றும் புலப்படாததால் அந்த ஆராய்ச்சியை கைவிடுத்தாள்.

மதுவின் வீடு தோப்பில் சற்று உள்ளட்டங்கி இருக்கும். முன்னும் பின்னும் ஏக இடம்விட்டு மத்தியில் அவள் தாத்தா சுந்தரேசன் கட்டியது. பழமையான மச்சு வீடு. வீட்டிற்கு வருவோரை இன்முகத்துடன் திண்ணையை ஒட்டியுள்ள மல்லிகை பந்தல் எல்லோரையும் முந்திக்கொண்டு வரவேற்கும்.


வீட்டை நெருங்கும்பொழுது லட்சுமி வாயில் நுரையுடன் துள்ளி குதித்து ஓடியது. நீ வரும்முன்பே அம்மா பால் கறந்துவிட்டாள் என்று சொல்லாமல் சொல்லியது. வீட்டிற்கு அவள் மாமா வந்துச்சென்ற அடையாளமாக பழங்கள் நிறைந்த ஒரு பை, பூ, கட்சி சம்பந்தமான நோட்டிஸ்களும் தெரிந்தன. மது நோட்டீஸ் ஒன்றை எடுத்து பார்த்தாள்,அதில் அவள் மாமாவின் படம் கட்சி தலைவரின் படத்திற்கு கீழாக பல வாக்குறுதிகளை அள்ளிவீசிக்கொண்டு சிரித்தார்.


மதுவின் தலை தெரிந்தவுடன், அவள் அம்மா செண்பகம் காபி எடுத்துக்கொண்டு வந்தாள். தன் பையை ஒரு ஆணியில் மாட்டிவிட்டு காபியை வாங்கிக்கொண்டாள். "ஏன்மா நான் வந்து பால் கரக்கமாட்டேனா ? " என்று வாஞ்சையுடன் கேட்டாள். செண்பகம் சிரித்துக்கொண்டே "உன் மாமன் ஒட்டுக்கேட்டு அவர் சகாக்களுடன் வந்தார், சும்மா அனுப்ப முடியுமா ???? அதான் நானே பால் கறந்து காபியும் பச்சியும் போட்டுக்கொடுத்து அனுப்பினேன்".



"ஹ்ம்ம் என்ன சொன்னார் உன் பெருமைக்குரிய அண்ணன்?"

"ஹரி சித்திரையில் வருகிறானாம். உன் அப்பாவையும் தாத்தாவையும் எங்கவென்று கேட்டார், தேங்காய் வெட்டு என்று சொன்னேன், சரி நானும் தோப்புப்பக்கம் தான் போகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிட்டார்."

ஏன்மா உங்கிட்ட மாமா ஒட்டு கேக்கலையா? என்றதும், "ஏண்டி என் அண்ணன் என்கிட்ட வாய் விட்டு கேட்க்கனுமாடி???.... என்றவாறு சிரித்தாள்.

அம்மா.... அப்பாகிட்ட தக்காளி வாங்கிவரச்சொன்னயா ? என்றதும் " வாங்கி வந்தாச்சுமா" என்றவள், மது இன்றைக்கு நீயே சமைமா என்றவாறு முக்காலியில் அமர்ந்தாள்.



எங்கோ " சித்திரையில் வந்து... நெஞ்சில் குடி கொண்ட.... உத்தமன் யாரோடி ...." என்ற பாடல் ஓடியது. தனக்கு தானே சிரித்துக்கொண்டு மாற்றுடை அணிந்து வீட்டு வேலையினை செய்ய ஆரம்பித்தாள். சற்றுக்கெல்லாம் மதுவின் அப்பா சிங்காரமும் அவரை தொடர்ந்து தளர்ந்த நடையுடன் சுந்தரேசனும் தேங்காய் வெட்டு கணக்கினைப்பற்றி பேசியவாறு திண்ணையில் வந்து அமர்ந்தார்கள்.

செண்பகம் அவர்கள் வரும் பொழுது மரியாதையை நிமிர்த்தமாக எழுந்து கொண்டு காபி கொண்டு வருமாறு மதுவிற்கு குரல்கொடுத்துக்கொண்டே தரையில் அமர்ந்தாள். மது இருவருக்கும் காபி கொடுத்துவிட்டு தானும் அவர்கள்பேச்சினை கவனித்தாள். பிறகு பின்கட்டிற்கு சென்று இரவு உணவாக இட்லியும் சட்னியும் செய்துவிட்டு தாத்தாவிற்கு கஞ்சியும் வைத்துவிட்டு மறுபடியும் திண்ணைக்கு வந்தாள். இபொழுது பேச்சு தேங்காயில் இருந்து நாற்றங்காளிற்கு வந்திருந்தது, "என்ன இன்னும் வாசு வரலை" என்று சுந்தரேசன் கேட்ட வேளையில், தாத்தா என்று பாசத்துடன் அழைத்தவாறு வீட்டிற்குள் நுழைந்தான். அனைவரும் அவனை மாற்றி மாற்றி நலம் விசாரித்தனர். மது நடுவீட்டில் அனைவருக்கும் தட்டை வைத்து அனைவரையும் சாப்பிட அழைத்தாள். அதே நேரத்தில் "அச்சோ எனக்கு பசிக்குது முதலில் சாபிட்றேன் பிறகு உங்க கேள்விக்கு பொறுமையாய் பதில் சொல்லறேன்" என்றான்.


சாப்பிட்டவாறே அப்பா என் நண்பன் கம்பென்யில் ஒரு நல்ல வேலை இருக்கு. அவங்களுக்கு சிங்கப்பூரிலும் கிளைகள் இருக்கு, அப்புறம் ஹரிகிட்ட பேசினேன் அவன் மது விருப்பட்டால் சரின்னு சொல்லிட்டான் என்றவாறு அனைவரின் முகத்தையும் படிக்க முற்பட்டான்.

சுந்தரேசன் " ஏண்டாப்பா வாசு, மது எவ்ளோ காலம் இங்க இருக்க போறா? இந்த சித்திரையில் ஹரிக்கும் லீவ் கிடைத்திடும், வைகாசியில் கல்யாணம், அப்புறம் நாம ஆசைபட்டாலும் இங்க இருக்க மாட்டாடா .... " என்றார் வருத்தத்துடன்.

சிங்காரம் " நீங்கள் சொல்றதும் வாஸ்துவம்பா ஆனால் சிங்கப்பூரில் மது வீட்டுக்குள் இருந்து ஹரி மட்டும் சம்பாரிச்சு குடுத்தனம் பண்ண முடியாது மதுவும் வேலைக்கு போனால்தான் அது பிள்ளை குட்டிகளுக்கு ஏதும் சேர்த்து வைக்க முடியும்.

"என்னம்மா நீங்க எதுவும் சொல்ல மாட்டேன்றிங்க ?" என்றான் வாசு.

செண்பகமும் " கொஞ்சநாள் வீட்டு வேலை பழகட்டும், இப்ப சென்னை வாசம் எல்லாம் தேவையில்லை கண்ணா". வாசு சிரிச்சுகிட்டே அம்மா இப்ப இவள்தானே எல்லாம் பண்றா பிறகு இன்னும் என்ன கத்துக்கணும்.

இந்த பேச்சுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதுபோல் மது அமைதியாக இருந்தாள். சுந்தரசேன் "அப்பா சொல்றதும் சரிதான்மா. நீ என்னமா நினைக்கிற?" என்றார்.
"தாத்தா அங்க டீச்சர் வேலை கிடைக்காதா?" என்றாள். வாசு முறைத்தான்,
பேத்திக்கு சென்னை செல்ல பிடித்தம் இல்லை என்பதை புரிந்துகொண்ட சுந்தரசேன் "சரி..... பார்க்கலாம் வாசு உனக்கு களைப்பா இருக்கும், நீ போய் தூங்கு என்றார். சிங்காரம் தோப்பிற்கு தண்ணீர் பாய்ச்ச மண்வெட்டியையும் டார்ச் லைட்டையும் எடுத்து கொண்டு கிளம்ப, வாசுவும் ஒரு மண்வெட்டியை எடுத்து கொண்டு அவருடன் கிளம்பினான்.


செண்பகமும் தூங்கிய பிறகு, மது மெதுவாக தாத்தாவிடம் சென்றால். சுந்தரேசனுக்கு பேத்தி தன்னிடம் விளக்கம் பெற வருவாள் என்பது தெரியும்.
சுந்தரேசன் "என்னமா தூக்கம் வரலையா?
மது " அண்ணனுக்கு என் மேல் கோபம்......."
சுந்தரேசன் "அவன் உன் நல்லதுக்கு தான்மா சொல்றான். உனக்கு ஏன் சென்னை போக பிடிக்கலை ?"
மது அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு சிரித்துக்கொண்டே "தாத்தா ஒரு மனிதனுக்கு எது மகிழ்ச்சியளிக்கும் ?"


சுந்தரேசன் " தாயின் கைப்பிடி சோறு, தன் தலை மொட்டை, புங்கை மரத்தின் நிழல்" இது மூன்றும் ஒரு மனிதனுக்கு அதித சுகம் அளிக்கும்னு என் தாத்தா ஓயாது சொல்லுவார். ஆனால் தனி மனிதனின் மகிழ்ச்சி எனபது வாழும் சுழல், காலத்தை ஒட்டியது. ஏன்மா இப்ப இது ரொம்ப முக்கியமான கேள்வியாமா ?"

மது " சும்மா சொல்லு தாத்தா.. உனக்கு எதெல்லாம் மகிழ்ச்சி?"

சுந்தரேசன் "பாட்டி வீட்டில் கொடுக்கும் அரையனா காசு, அப்பாவின் மென்மையான சிரிப்பு, பாலிய காலம், நான் உழைத்து வாங்கின நூறு குழி தோப்பு, உன் பாட்டியை கல்யாணம் பண்ணினது, உன் அப்பாவோட பொக்கை வாய் சிரிப்பு, அவன் கல்யாணம், வாசு, அப்புறம் இந்த மது..... இன்னும் நிறைய இருக்கு. நீ என்ன சொல்லனும்னு நினைக்கிறாயோ அதை சொல்லுமா..."

மது " எனக்கு இந்த ஆசிரியர் தொழில் பிடிச்சிருக்கு. மகிழ்ச்சியாய் இருக்கு. இதே வேலை அங்கும் கிடைக்கலாம் இல்லையா தாத்தா, அப்படி கிடைக்கவில்லை என்றால் நான் அதுக்கு தகுந்தார் போல் மாறிகொள்வேன். அண்ணன் சொல்றதும் எனக்கு புரியுது.. நான் இங்கு இருக்கும் வரையும் போகிறேன் தாத்தா. நீங்க சொன்னால் எல்லோரும் கேட்பாங்க."


சுந்தரேசன் " சரி நான் பேசுறேன்.... நீ போய் தூங்கு.. " மதுவும் தாத்தா இனி பார்த்து கொள்வார் என்னும் நம்பிக்கையில், தூங்க சென்றாள். தாத்தா யாரிடம் என்ன சொன்னார் என்று தெரியவில்லை.
அப்பாவோ இந்த சென்னை பயணத்தை பற்றி எதுவும் பேசவில்லை.

இதோ வாசுவும் சென்னைக்கு பயணப்பட்டு விட்டான். பேருந்தில் ஏறும் முன் "மது உனக்கு இந்த ஆசிரியர் தொழில் தான் விருப்பம்னு நினைக்கிறேன், ஹரிகிட்டையும் பேசி அதே வேலைகிடைக்க ஏற்பாடு பண்ண சொல்றேன்" என்றான்.

மது எதுவும் சொல்லாமல் சிரித்தாள்.
"என் மேல் கோபம் தானே ?" என்றாள்.
"அப்படியெல்லாம் இல்லை மது, நாங்க வேறமாதிரி நினைத்தோம் நீ வேறமாதிரி நினைக்கிறாய் அவ்ளோதான். சரி நான் கிளம்புகிறேன் என்றவன் அப்பாவிடமும் சொல்லிக்கொண்டு பேருந்தினுள் சென்று மறைந்தான். பேருந்து புறப்பட்டவுடன், அப்பாவுடன் வீட்டிற்கு வந்தாள்.

கடந்த ஒரு வாரமாக மனதினை அழுத்திக்கொண்டிருந்த இனம் புரியாத ஒரு சுமை, காற்றோடு போனதுபோல் உணர்ந்தாள். வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் சென்றது.

Thursday, March 13, 2008

பிச்சை இன்று இல்லை

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை, சம்பவங்களை நாம் கடந்து வந்திருந்தாலும் ஒரு சில நிகழ்வுகள் மட்டும் மனதில் சம்மணமிட்டு அமர்ந்துகொள்ளும், அவற்றை அசைபோட்டு பார்ப்பது ஒரு சுகம். அப்படி நான் அசைபோட்டு பார்க்க முயலும் போது "இதோ நான் இருக்கிறேன்" என்று "பிச்சை" தான் என் மனத்திரையில் தோன்றும்.

பொதுவாக கிராமங்களில் வீட்டிற்கு ஒரு நாய் குட்டி இருக்கும். எங்கள் வீட்டில் பிச்சை இருந்தது. ஆமாம், எங்கள் வீட்டு நாய் குட்டியின் பெயர்தான் பிச்சை. இந்த கணத்தில் "ஏன் வேறபெயர் எதுவும் கிடைக்கவில்லையா?" என்று நீங்கள் கேட்கலாம். நானும்கூட அப்பொழுது என் அம்மாவிடம் இந்த பெயர் வேண்டாம் என்று அழுதேன்.

இந்த பிச்சைக்கு முன்பு ஜூரி, ப்ரோவ்னி, மங்கா என்று அழகான பெயர்கள் கொண்ட நாய் குட்டிகள் எங்கள் வீட்டில் இருந்து. ஏனோ எல்லா குட்டிகளும் சொற்பகாலத்தில் மறைந்தது. அதனால் தான் என் அம்மா பிச்சை என்ற பெயர் வைத்தார்கள். எனக்கு அப்பொழுது அந்த பெயர் பிடிக்கவில்லை. பிச்சை அழகாக இருக்கும். அதன் கண்களில் அப்படி பாசம் சொட்டும். பயங்கர சுட்டி.. :)

நான் ஏழாம் வகுப்பு விடுதியில் தங்கி படித்து கொண்டிருந்தேன். வீட்டிற்கு எப்பபோவோம் என்று ஏங்கிய காலம் அது. என்னை அப்பா வீட்டிற்கு அழைத்து சென்றார். நான் விடுமுறைக்கு வீட்டுக்கு சென்றால் வயலுக்கு போவது எனக்கு மிகப்பெரிய சுற்றுலாவாகும். என் அப்பா அதிகாலையில் வயலுக்கு புறப்பட்டுகொண்டிருந்தார். நானும் அடம்பிடித்து அப்பாவுடன் வயலுக்கு புறப்பட்டேன். எனக்கு துணையாக பிச்சையும் வந்தது. எங்கள் வீட்டிற்கும் வயலிற்கும் 2 கி.மி தொலைவாகும்.

என் அப்பா இயல்பாகவே வேகமாகத்தான் நடந்து செல்வார். நான் மெதுவாக நடத்து சென்றால் என்னை வீட்டிற்கு அப்பா திருப்பி அனுப்பிவிடுவரோ என்ற பயத்தினால் நானும் வேகமாக நடந்து சென்றேன். நடந்தேன் என்று சொல்வதைவிட ஓடினேன் என்று சொல்வது மிக பொருத்தமாக இருக்கும். எங்கள் இருவரையும் முந்தி கொண்டு பிச்சை ஓடியது :)

எங்கள் வயலுக்கு செல்லும் பாதையில் ஒருவருடைய நிலத்தில் மின்-இரைவை (Electric Pump) அமைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. அதனால் அவ்விடம் சதுப்பு நிலத்தை போல் இருந்தது. ஏறக்குறைய புதைகுழி போன்று இருந்தது. என் அப்பா "ஆயி (பெண் பிள்ளையை இப்படி அழைப்பது வழக்கம்) பிச்சையை தூக்குபா, அந்த சகதியில் மாட்டினால் ஒன்னும் செய்யமுடியாது" என்று சொன்னார். நானும் அதை பிடிக்க அருகில் சென்றேன், நான் விளையாடுகிறேன் என்று அது சுற்றி சுற்றி ஓடி சரியாக அந்த சகதியில் போய்மாட்டிகொண்டது.

பிச்சை குறைத்து கேட்டதுண்டு, அன்றுதான் முதல் முறையாக அது அழுதது. எந்து ஒரு ஜீவனும் உயிர் வாழ்வதற்கு நூறு சதவிதம் முயற்சி செய்யும், அதை பிச்சையும் செய்ய முயன்றது. பிச்சை விழுந்தவுடன் அழுதுகொண்டே நீச்சல் அடிக்க முயன்றது. அதன் காரணமாக அதன் உடல் மிகவேகமாக உள்ளே சென்று கொண்டிருந்தது. அதன் முன் கால்களும், தலையும் மட்டுமே தெரிந்தது.

எனக்கு பிச்சையின் உடல் உள்ளேசெல்லும் என்று தெரியாது. நானும் அழுதேன். என் அப்பாவின் கைகளுக்கும் பிச்சை எட்டவில்லை. என் அப்பாவிடம் "குதிப்பா" என்று அழுதேன். ஆனால் அப்பா என்னை "எட்டிபோப்பா" என்று அதட்டினார். நான் அப்பாவை மனதில் திட்டிக்கொண்டு சில அடிகள் நகர்ந்தேன்.

என் அப்பா தன் முண்டாசை அவிழ்த்து ஒரு முனையை தூக்கி பிச்சையின் வாயருகே வீசினார். பிச்சையும் அந்த துண்டை கவ்விகொண்டது. எப்படியோ அப்பா பிச்சையை மீட்டார். எனக்கு ரொம்ப சந்தோசம் அந்த சந்தோசத்தை என்னால் வார்த்தைகளால் பதிவு செய்ய இயலாது.

பிறகு பிச்சையை ஏரியில் குளிக்கவைத்து, அதை கையில் இருந்து கீழே விடாமல் தூக்கிகொண்டே வீட்டிற்கு சென்றேன். அந்த நிகழ்வு என் அழ்மனத்தில் இன்றும் பசுமையாக இருக்கிறது. இப்பொழுதும் நான் தெருவில் எந்த நாய் குட்டியை பார்த்தாலும் பிச்சையின் கண்களை போன்று உள்ளதா என்று பார்ப்பேன். அனாலும் இன்று வரை நான் அந்த கண்களை பார்க்கவில்லை. பிச்சையும் தோராயமாக பத்து வருடம் எங்கள் வீட்டில் இருந்து மறைந்தது. ஆமாம் இன்று பிச்சை இல்லை. அதன் நினைவுகள் மட்டுமே உள்ளது.

Saturday, March 1, 2008

சாரிப்பா......

சென்னை என்றாலே ஒரு பரபரப்பு அதிலும் திங்கள் கிழமை என்றால் சொல்லவும் வேண்டாம்.இந்த பரபரப்பும் ஒரு அழகுதான். இதை படிக்கும் நண்பர்கள் அப்படி ஒண்ணும் இல்லைமானு சொன்னாலும் நான் மயிலை வாசியா இருக்கிற வரையுலும் இது சரிதான் என்று சொல்லுவேன் ஏன் என்றால் இருக்கின்ற இடம் சொர்க்கம் அல்லவா. என்னை வியக்க வைத்த ஒரு சிறிய நிகழ்வை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு சின்ன ஆசை......

வழக்கம் போல் அலுவலகத்திற்கு செல்ல, மயிலை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தேன். அன்று ஏனோ வழக்கத்தையும் விட அதிக கூட்டம். இளையவர் முதல் முதியவர் வரை மனதாற 21G யை வாழ்த்தி கொண்டு இருந்தார்கள். வழக்கம்போல் நானும் அதில் சேர்ந்தேன் :)

அப்பொழுது ஒரு சின்ன பையன் அவன் அப்பாவுடன் (அவர்கள் சம்பாசனையில் தெரிந்தது) பைக்கில் வந்து நான் நிற்கும் இடத்தில் இறங்கினான். அவன் நான்காம் அல்லது ஐந்தாம் வகுப்புதான் படிக்கலாம். அவன் முகத்தில் அப்படி ஒரு வருத்தம்.

அவன் அப்பா பைக்கை ஓரத்தில் நிறுத்திவிட்டு அவன் அருகில் நின்றார். ஒரு ஆட்டோவை நிறுத்தி அடையாரில் உள்ள ஒரு பள்ளியின் பெயரை கூறி எவ்வளவு என்று கேட்டாரு. அந்த ஆட்டோ ஓட்டுனர் 100 ரூபாய்னு சொல்ல, அவர் தனது கைகடிகாரத்தையும் பார்த்து அந்த பையனையும் பார்த்தார்.

அவன் கண்ணிலோ இப்ப எட்டிப்பார்கட்டுமா என்று கண்ணீர் குளம்.... அவன் அழுதிருக்கலாம், ஆனால் மிடர் விழுங்கி கண்ணீர் வெளிவராது கட்டுப்படுத்தினான். அவன் அப்பாவோ, 100 ரூபாயை நீட்டி போய் இறங்கினவுடன் கொடுக்கணும்னு என்று சொன்னார். அவன் அதை வாங்காமல் தலையை மட்டும் மறுத்து ஆட்டினான். கடந்த பத்து நிமிடங்களில், முதல் முறையாக அவன் வாய் திறந்து "சாரிப்பா இவங்க (பொதுவாக அந்த குட்டி கை எல்லோரையும் காட்டியது) போகிற பஸ்சில் ஏற்றி விடுங்க நான் ஸ்கூலுக்கு போய்டுவேன் என்று அழுகையை கட்டுப்படுத்தி சொன்னான். இந்த வயதில் இவனுக்கு இவ்வளவு தன்மானமானு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் அவன் முதுகில் செல்லமாக தட்டினேன்.என்னை பார்த்து அந்த பூ சிரிச்சது.

அவன் அப்பா அவனை அன்பொழுக உற்று பார்த்தார். இதற்குத்தான் காத்திருந்தேன் என்பதுபோல் இரண்டு துளி கண்ணீர் எட்டி பாத்துச்சு. தனது கை குட்டையால் அவனது கண்ணை மெல்ல துடைத்தார். இதில் இருந்து என்ன கத்துகிட்டனு கேட்டார் ???? அவன் பட்ட என்று "இனிமேல் சீக்கிரம் கிளம்பிடுவேன்பா, ஸ்கூல் பஸ்ஸை மிஸ் பண்ண மட்டேன்பானு சொன்னான்".

அவன் மறுபடியும் சாரிப்பானு சொன்னான். அவர் அவன் உச்சந்தலையில் முத்தமிட்டு, அவன் ஷர்ட் பாக்கெட்டில் 100 ரூபாயை வைத்து ஆடோல ஏறு உனக்கு ஸ்கூலுக்கு நேரமாகுதுனு சொன்னார். அவனும் ஆடோல ஏறி கொண்டு , அவங்க அப்பாக்கு டாடா காண்பித்தான், எனக்கும் காண்பித்தான். அந்த ஆட்டோ போனவுடன் அவரும் தனது பைக்கில் பறந்தார். எனக்கு அப்பஎங்கோ படித்த ஒற்றை வரி ஞாபகம் வந்தது. " உன் மகனுக்கு நீ பரிசளிக்க விரும்பினால் நல்நடத்தையை பரிசளி". அந்த தந்தை அவனுக்கு பரிசளித்துவிட்டார். ஒரு வழியாக "உனக்காக வருகிறேன் எனக்காக காத்திரு" என்று சொல்லாமல் சொல்லும் 21G யும் வந்தது, நானும் ஏறிகொண்டேன்.

அடுத்து வேலையை பற்றி சிந்தித்தாலும், எனக்கு அந்த நிகழ்வானது வரும் தலைமுறையும் சுய மரியாதையுடனும் பாசவுணர்வுடன் இருக்கும் என்று சொல்லாமல் சொல்லியது.இது என்னுடய் கருத்து அல்லது கண்ணோட்டமாகும். தமிழ் அங்கங்கு தத்தி இருக்கலாம் ஆகையால் குற்றம் குறை இருப்பின் மன்னிக்கவும்.